“படப்பிடிப்பில் ஆச்சரியப்படுத்த தயாராக இருப்பவர் சூரி” - வெற்றிமாறன்

By KU BUREAU

நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31-ம் தேதி வெளியான படம் ‘கருடன்'. துரை செந்தில்குமார் இயக்கிய இதில் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உட்பட பலர் நடித்தனர். லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

விழாவில், இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்துக்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் கருடனும் ஒன்று.படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்க வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் இது. டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையை போனசாக வைத்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம்.

சூரியின் உழைப்பு அசாதாரணமானது. அவர் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை ஆச்சரியப்படுத்த எப்போதும் தயாராக இருப்பவர். கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி, கதாபாத்திரமாகவே இருக்க முயற்சி செய்பவர்.‌ இதை சூரி, தொடர்ந்து வளர்த்தெடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பான நடிகராக, கூடுதல் உயரத்துக்கு செல்வார்” என்றார். சசிகுமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர்.ஏ.வில்சன், இயக்குநர் துரை. செந்தில்குமார், சூரி உட்பட பலர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE