நடிகை த்ரிஷாவுக்குக் கரோனா: குணமடைந்துவருவதாக ட்வீட்!

By ஏக்நாத்ராஜ்

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் வைரஸ் நாட்டில் நுழைந்த பின், தினமும் வேகமாக பரவி வருகிறது கரோனா. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் திரையுலகப் பிரபலங்களையும் கரோனா விட்டு வைக்கவில்லை. நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, நடிகைகள் லட்சுமி மஞ்சு, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உட்பட பலருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். அதேசமயம், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் குணமடைந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், புத்தாண்டுக்கு முன் நான் கரோனாவால் பாதிக்கப்பட்டேன். எனது மோசமான வாரங்களில் ஒன்றாக இது இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், குணமடைந்துவருகிறேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள். என் சோதனைகள் முடிந்து விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். நான் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் விரைவில் நலம்பெற ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE