காலம் வந்துவிட்டது வேந்தே... - ‘ஆயிரத்தில் ஒருவன்-2’அப்டேட்

By காமதேனு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துக்கென்று, தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கார்த்தி நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆன போதிலும், இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தனுஷ் நடிக்க ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ உருவாகும் என்று செய்தி கடந்த ஆண்டு வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக,கடந்த ஜனவரி மாதம் ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ ஓவியம் ஒன்றை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முதலாம் பாகத்தின் முடிவில் சோழ தேசத்து இளவரசனை, தூதுவனான கார்த்தி கதாபாத்திரம் அழைத்துக்கொண்டு காட்டுக்குள் செல்வது போன்று திரைப்படம் முடிவடைந்திருக்கும். அந்த இளவரசன் வளர்ந்து சோழ தேசத்து வேந்தனாக மாறுவதே 2-ம் பாகத்தில் கதையாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுவந்தது.

தற்போது இயக்குநர் செல்வராகவன் “காலம் வந்துவிட்டது வேந்தே” என்று பதிவிட்டிருக்கிறார். ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ பாகத்துக்கான பணிகள் ஆரம்பிக்கவுள்ளதைத்தான் இவ்வாறு குறிப்பால் உணர்த்தியுள்ளார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். விரைவில் இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE