“வரலாற்றில் உள்ளதைத்தான் பேசினேன்” - பா.ரஞ்சித்

By காமதேனு

நீலப் புலிகள் அமைப்பு சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களை இயக்குநர் பா.ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார். பெரும் சர்ச்சையைக் கிளப்பிய அவரது பேச்சுக்கு எதிராகப் பல அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, தனது பதில் மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

அந்த பதில் மனுவில், “டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, ‘செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தெரிவித்தேன்.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக்கூட்டத்தில் பேசினேன். நான் பேசிய தகவல்களைப் பலரும் பேசியுள்ளனர். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை.

எனது பேச்சு எந்த சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே, என் மீது திருப்பனந்தாள் போலீஸார் பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு, நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE