ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: 25-ம் தேதி ஜனாதிபதி வழங்குகிறார்

By காமதேனு

இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சிவாஜியும், கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் வருகிற 25-ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில், ரஜினிகாந்த்துக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ரஜினியுடன், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காகச் சிறந்த ஜூரி விருதையும், நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE