போஸ்டர் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்; விஜய் ரசிகர்களை எச்சரித்த புஸ்ஸி ஆனந்த்

By காமதேனு டீம்

கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள், எந்த தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் வந்தாலும் அவர்களுடன் விஜய் இருப்பது போல் போஸ்டர் பேனர் அடித்து பரபரப்பை கிளப்பி வந்தனர். சில போஸ்டர்கள் தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், மக்களை முகம் சுழிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. விஜய் இதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

“அன்புடைய இயக்க தோழர்களுக்கு வணக்கம் !

சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள்/இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படித் தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE