பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com
கணுக்கால் தெரிய தூக்கிக் கட்டிய அடர் நிற நூல் சேலை… அள்ளிச் செருகிய கூந்தல்… நெற்றியில் நாலணா அகலத்துக்குக் குங்குமம்... அதன் மேலே ஒரு திருநீற்றுக் கீற்று… அலட்சியமான பார்வை… அசத்தலான நடை… இதழ்களில் ஏளனம் கலந்த புன்னகை. அதிகாரக் குரல். இதுதான் ஊரே பயந்து நடுங்கும் பெண் தாதா ‘காளியம்மா’.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘ஆயுத எழுத்து’ தொடரில், ‘காளியம்மா’ கதாபாத்திரமாகவே மாறிக் கலக்கிக்கொண்டிருப்பவர், நடிகை மவுனிகா. 1985 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்துவருபவர். பெரும்பாலும் சோகத்தைச் சுமந்துகொண்டு, வலியோடு வாழ்க்கையை நகர்த்தும் மென்மையான கதாபாத்திரங்களிலேயே மவுனிகாவைப் பார்த்துப் பழகிய நமக்கு, இந்த மவுனிகா புதுசு!
“இதுக்கெல்லாம் விஜய் டிவி-க்கும் தயாரிப்பாளர் ரமணகிரிவாசன் சாருக்கும்தான் நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ச்சியுடன் தொடங்கும் மவுனிகா, தன் கலையுலகத் தேடல் பற்றிச் சொல்கிறார்.