‘ரயில்’ படம் எப்படி? - ப்ளஸ், மைனஸ் குறிப்புகள்


1 / 10
மிகச் சொற்பமான முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு கிராமத்தின் வாழ்வியலையும், அந்நிலத்தின் மனிதர்களையும் யதார்த்துக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான ‘சமகால’ வெறுப்பை கரையச் செய்யும் அவரது எழுத்தும் நோக்கமும் வரவேற்கத்தக்கது.
2 / 10
“இந்த பூமிக்கு நம்ம எல்லாரும் பொழைக்க வந்தவங்க தான்”, “பெருமுதலாளிகள் இங்க வந்து நிலம் வாங்குறாங்க. அவங்கள உங்களால தொட முடியாது. எளிய மக்கள தான் அடிப்பீங்க” என்ற வசனங்கள் அழுத்தம் கூட்டுகின்றன.
3 / 10
குறிப்பாக, அந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக துபாய் சென்று திரும்பும் ஒருவர், “எல்லாருக்கும் வயிறு இருக்கு. பசிக்கும். துபாய்ல நான் புலம்பெயர் தொழிலாளர்தான்” என பேசும் இடம் கவனிக்க வைக்கிறது. குண்டு பல்பை மாட்டும் காட்சியில் இருவேறு மாநிலத்தவர்களின் மனநிலையை பிரதிபலித்திருப்பது சிறப்பு.
4 / 10
மதுவால் சீரழியும் குடும்பம், பொருளாதார சூழல், கிராம மக்கள், வட்டார வழக்கு, வடமாநில தொழிலாளரின் கரிசனம், எதிர்பாராத விபத்து, அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சில எமோஷனல் காட்சிகள் ‘ரெட்’ சிக்னல் இல்லாமல் கடக்கின்றன.
5 / 10
உள்ளூர்வாசி vs வடமாநிலத்தவர் என்ற முரணுக்குப் பின், கதை எதை நோக்கி நகர்கிறது என்பதில் தெளிவில்லை. நோக்கமின்றி நகரும் இரண்டாம் பாதியில் வரும் அழுகை, துயரக் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.
6 / 10
வடமாநிலத்தவர்களின் பொருளாதார சூழல், அவர்களின் உணர்வுகள், புலம்பெயரும் அம்மக்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான நிர்பந்தம் ஆகிய எதையும் படம் அழுத்தமாக காட்சிப்படுத்தாமல், ‘நல்லவர்’ என்ற ஒற்றை புள்ளியில் சுருங்கியிருப்பது எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்க்கவில்லை.
7 / 10
உள்ளூரில் இருப்பவர்கள் குடித்துகொண்டு திரிவதால் அவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பதை காட்சிப்படுத்தியதில் சார்புத் தன்மை இல்லாமல் இல்லை.
8 / 10
வடமாநில மக்களை நல்லவர்களாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பாராட்டத்தக்கது என்றாலும், அவர்களின் ஆழமான வலியையும், மறுபுறம் உள்ளூர் மக்களின் எண்ணங்களையும் ‘பேலன்சிங்’காக அணுக முடியாமல் தடுமாறுகிறது படம்.
9 / 10
உள்ளூர் மக்களுக்கான ஊதிய பாகுபாடு, வடமாநில தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல்கள் குறித்த எந்தப் பதிவும் இல்லாமல் மேலோட்டமாக நகர்வது சிக்கல்.
10 / 10
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வியலையோ, உள்ளூர் மக்களின் உணர்வுகளையோ அழுத்தமாக காட்சிப்படுத்துவதிலிருந்து தடம் மாறியிருக்கும் இந்த ‘ரயில்’ வேறொரு ட்ராக்கில் பயணித்திருப்பதை படம் முடிந்து வெளியேறும்போது உணர முடிகிறது.
x